×

நாட்டிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் டி ஆர்.பி.ராஜா உரை!

சென்னை: நாட்டிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் டி ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன.

2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த மாநாட்டில், மோட்டார் வாகனங்கள், ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், வேளாண்மை தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் டி ஆர்.பி.ராஜா உரையாற்றுகையில்; மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இருசக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன. ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதலமைச்சரின் இலக்கு என்று கூறியுள்ளார்.

 

The post நாட்டிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் டி ஆர்.பி.ராஜா உரை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister D R B. ,Chennai ,World Investors Conference ,Minister ,TR. B. ,king ,Chennai Trade Centre ,Nandambakak ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து